Thursday, 31 December 2020

துஆ

காலை நேரத்தை உதிக்கச் செய்யும் நாயகனே! இரவை அமைதியாக்கும் ரஹ்மானே! சூரியனையும், சந்திரனையும் காலக் கணக்கிற்கு ஏற்பச் சுழலச் செய்பவனே!  ஆதியும், அந்தமும் இல்லாத ஏக இறைவனே! உன்னைப் போற்றிப் புகழ்கிறோம்! எங்களைப் படைத்த ரப்பே! உனக்கே புகழனைத்தும்! உன்னையே வணங்குகிறோம். உன்னையே சரணடைந்தோம். உன்னிடமே உதவியையும் கேட்கிறோம்.

கருணையாளனே! நேற்றைய நாளை விட இன்றைய நாளைச் சிறப்பாக்குவாயாக! இன்றைய நாளில் எங்கள் காரியங்களை இலேசாக்குவாயாக! உன்னிடம் இருந்தோ அல்லது பிறரிடம் இருந்தோ வருபவை எவையானாலும், அவை உன் அருளால் மட்டுமே கிடைக்கின்றன என நாங்கள் நம்புகிறோம். எங்கள் தேவை அறிந்து உதவிடுவாயாக! உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம். எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் இல்லங்களில் உன் அருளை விரிவாக்குவாயாக! எங்களின் ரிஜ்குகளில் பரக்கத் செய்வாயாக! எங்களின் நிலைமைகளை மிக அழகான, மன அமைதி தரும் நிலைமைக்கு மாற்றுவாயாக! எங்களின் நோய்களைக் குணப்படுத்துவாயாக! எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக! எங்களின் ஈமானை வலுப்படுத்துவாயாக. துன்பங்களை எதிர் கொள்ளும் ஆற்றலைத் தருவாயாக!

("என்) இறைவனே! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும், என் சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"  (அல்குர்ஆன் : 14:40)

"எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து, எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! (அல்குர்ஆன் : 25:74)

"இவ்வுலகிலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" (அல்குர்ஆன் : 7:156)

அனைத்து உலகிற்கும் அதிபதியே! உன்னிடமிருந்து எங்களின் எல்லா நோய்களும் நீங்கிடும் ஷிபாவைத் தருவாயாக! எங்களுக்கு நலன் தருபவற்றைப் பெறுகின்ற ஆற்றலைத் தருவாயாக! உன் அருளை விரிவாக்குவாயாக! துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் மன வலிமையைத் தருவாயாக. நீ அருள்வதைக் கொண்டு திருப்தி கொள்ளும் உள்ளத்தைத் தருவாயாக! உன் படைப்புகளுடன், பெருந்தன்மையுடன் பழகும் வகையில் எங்கள் உள்ளத்தை விரிவாக்குவாயாக.

காலம் கடக்கு முன் பாவமன்னிப்பின் பால் விரையும் மனோபாவத்தைத் தருவாயாக! நாங்கள் வாழ்கின்ற காலத்திலும், எங்கள் மரணத்திலும், எங்கள் அந்தரங்கங்களை அழகாக ஆக்குவாயாக! மரணத்திற்குப் பின் எங்கள் கப்ரை விசாலமாக ஆக்குவாயாக!

'இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன், நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!""பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!"

எங்களின் பாதுகாவலனே! எங்களிடம் உள்ள தீயவற்றின் காரணமாக, உன்னிடம் உள்ள நன்மைகளைத் தடுத்து விடாதே! எங்களின் நன்றிக் குறைவின் காரணமாக, உன்னிடம் உள்ள அபரிதமான நலன்களைத் தடுத்து விடாதே! எங்களின் பாவ மன்னிப்புக் குறைவின் காரணமாக, கேள்விக் கணக்குக் கேட்கும் நாளில் எங்களைத் தண்டித்து விடாதே! எங்களின் பொறுமைக் குறைவின் காரணமாக, எங்களுக்கு எந்த இழப்பையும்  செய்து விடாதே! நீ சங்கைக்குரியவன்! உன் கருணை அனைத்துப் பொருட்களின் மீதும் பரவி இருக்கிறது!

காரணங்களுக்கெல்லாம் காரணமானவனே! அனைத்து வாசல்களையும் திறப்பவனே! சப்தங்களைக் கேட்பவனே! அழைப்பவர்களுக்குப் பதிலளிப்பவனே! தேவைகளை நிறைவேற்றுபவனே! நீ அளிக்கும் ஹலாலானவற்றைக் கொண்டு, ஹராமானவற்றிலிருந்து எங்களுக்குப் போதுமாக்குவாயாக! உன் மேலருளால்,  உன்னை அல்லாத பிறரை விட்டும், எங்களைத் தேவையற்றவவர்களாக ஆக்குவாயாக! உன் நிஃமத்களை எங்களுக்கு நிரந்தரமாக்குவாயாக! எங்கள் மீது எவற்றை விதித்துள்ளாயோ, அவற்றில் உன்  மேலதிகக் கருணையைக் காட்டுவாயாக! 

நோய்களைக் குணப்படுத்துபவனே! உன் ஷிபா அன்றி வேறெந்த மருந்தும் பலனளிக்காது. உன்னை நின்று வணங்க இயலாத அளவு எங்களின் உடலில், உன் சோதனையை ஏற்படுத்தி விடாதே!

யா அல்லாஹ்! எங்கள் உள்ளத்தை உன்னிடம் ஒப்படைக்கிறோம். உறுதியான, அதன் பின் குப்ரு ஏற்படாத ஈமானை எங்களுக்கு அருள்வாயாக! இவ்வுலகிலும், மறுமையிலும் உன் சங்கையான அற்புதங்களை அடையும் ரஹ்மத்தை அருள்வாயாக!

யா அல்லாஹ்! விதியில் வெற்றியைக் கேட்கிறோம். ஷுஹதாக்களுக்கான இடத்தைக் கேட்கிறோம். ஷுஹதாக்களின் வாழ்க்கையைக் கேட்கிறோம். எங்களின் எதிரிகளுக்கு எதிரான உதவியைக் கேட்கிறோம்.

யா அல்லாஹ்! எங்களைப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கண்ணியப்படுத்துவாயாக!  எங்களை வழி கேட்டில் இழுத்துச் செல்லாத செல்வத்தைக் கொடுப்பாயாக! பலனுள்ள கல்வியைக் கொடுப்பாயாக. பொறுமையான உள்ளத்தைக் கொடுப்பாயாக. கடனில்லா வாழ்வைக் கொடுப்பாயாக. எங்கள் ஆலிம் பெருமக்களுக்கும், செல்வர்களுக்கும் சமுதாயச் சிந்தனையைக் கொடுப்பாயாக. எங்கள் அரசியல் தலைவர்களுக்குத் தூய எண்ணத்தைக் கொடுப்பாயாக. எங்கள் இளைஞர்களுக்கு மார்க்கப் பற்றைக் கொடுப்பாயாக. எங்கள் பெண்களுக்கு இம்மை, மறுமைக்கான நல்லறிவைக் கொடுப்பாயாக. எங்கள் குழந்தைகள் இம்மையிலும், மறுமையிலும் சிறந்து விளங்க, நல்ல கல்வி ஞானத்தைக் கொடுப்பாயாக. எங்கள் அனைவருக்கும் உன்னை மட்டுமே வணங்கி, உன்னிடம் மட்டுமே உதவி கேட்கும் ஈமானைக் கொடுப்பாயாக!

யா அல்லாஹ்! உன்னிடம் எங்களின் தேவைகளை முன் வைக்கிறோம். எங்களின் சிந்தனை, குறைவாக இருந்தாலும், எங்களின் அமல்கள் குறைவாக இருந்தாலும், உன் கருணையின் பால் தேவை உடையவர்களாக இருக்கிறோம். எங்கள் உள்ளங்களில் அமைதியை ஏற்படுத்துவாயாக! எங்கள் நோய்களைக் குணப்படுத்துவாயாக! எங்கள் நிலைமைகளைச் சீர்படுத்துவாயாக! என்றும் உன்னை வணங்கி, உன்னிடமே உதவி கேட்கும் நல்லடியார்களாக எங்களை வாழ வைப்பாயாக!

"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"  (அல்குர்ஆன் 2:201)

"பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸ்தாரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!"

''இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்கு உள்ளாக்காது இருப்பாயாக!"

''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா."

''எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ, அவர் (கண்ணியம் அடைவார்)." (அல்குர்ஆன் 26: 83-89)

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

*ஆமீன்*

Friday, 18 December 2020

குழந்தைக்காக துஆ

அல்ஹம்துலில்லாஹ்! மீண்டும் உயிர் கொடுத்து  காலைத் தொழுகை யை நிறைவேற்ற தவ்பீக் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் 

  யா அல்லாஹ்! இந்த காலை நேரத்தில் நபி ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆவை நன் கேட்கிறேன்.

 குழந்தை பாக்கியம் இல்லாத ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “என இறைவா! நீ என்னை சந்ததி இல்லாமல் ஒற்றையாக விட்டு விடாதே. நீ வாரிசுதாரர்களில் மிகவும் மேலானவன்.” 

என உன்னிடத்தில் பிரார்த்தனை செய்த போது
 “நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; 

நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். 

 அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்”.

 என்று அவர்களுடைய துஆவை ஏற்றுக் கொண்டாய்.

யா அல்லாஹ்! எங்களில் யாருக்கு வாரிசு இல்லையோ அவர்களுக்கு வாரிசை கொடுப்பாயாக.

 எங்கள் சகோதரிகளில் யாருக்கு குழந்தை பாக்கியம் இல்லையோ அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பாயாக.

 எங்களில் யாருக்கு வாரிசுகளை கொடுத்தாயோ அந்த வாரிசுகள் உறுதியான ஈமானுடன் நல்ல அமல்களுடன் வாழையடி வாழையாக வாழ அருள்புரிவாயாக.

 நாங்களும் எங்கள் வாரிசுகளும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாகவும் 
 உன்னை ஆசை கொண்டும் பயத்தோடும் பிரார்த்திப்பவர்களாகவும் உன்னிடம் உள்ளச்சம் கொண்டவர்களாகவும் ஆக்குவாயாக.

அவர்களையும் எங்களையும்
தீய நோக்கோடு யாரும் அணுகாமல் பாதுகாப்பாயாக!

எதிர்பாரா இடர்பாடுகள் ஏற்படாமல் பாதுகாப்பாயாக!

எங்களின் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் கவலை களைப் போக்குவயாக 

ஆமீன்

Tuesday, 15 December 2020

துஆ

தினந்தோறும் பஜ்ரு தொழுகைக்குப் பின் இமாம்கள் இறைஞ்சிக் கேட்கும் துஆ
----
اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلي االِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ بَارِكْ وَسَلِّمْ
. اَللّهُمَّ اجْعَلْ صَبَاحَنَا هذَاصَبَاحًا مُبَارَكاً مِنَ الْخَيْرِقَرِيْبًاوَّعَنِ اشَّرِّبَعِيْدًا لاَّخَاسِأً وَلاَ خَاسِرًا وَّلامَحْرُوْمًا

. اَللّهُمَّ اجْعَلْ اَوَّلَ يَوْمِنَا هذَالَنَاصَلَاحًاوَّاَوْسَطَهُ فَلَاحًاوَّااخِرَهُ نَجَاحًاوَّرَبَاحًا

. اَللّهُمَّ صَبِّحْنَا مِنْكَ صَبَاحَ الرِّضَآءِ وَاكْفِنَا شَرَّمَافِي الْقَضَآءِ وَلاَتُعَذِّبْنَابِالْجَرَائِمِ يَاكَرِيْمُ يَارَحِيْمُ.
 اَللّهُمَّ اخْعَلْ صَبَاحَنَاصَبَاحَ الصَّالٍحِيْنَ وَمَسَآءَنَامَسَآءَالذَّاكِرِيْنَ وَقُلُوْبَنَا قُلُوْبَ الْخَاشِعِيْنَ. وَاَبْدَانَنَااَبْدَانَاالْمُطِيْعِيْنَ.
 وَاَعْمَالَنَااَعْمَال الْمُتَّقٍيْنَ. وَاَسِنَتَنَا اَلْسِنَةَالذَّاكِرِيْنَ. وَنَبِّهْنَا عَنْ نَوْمَةِالْغَافٍلِيْنَ وَشَارِكْنَافِيْ دُعَاءِالصَّالِحِيْنَ. وَارْزُقْنَاالْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِيْنَ.

 وَصَلَّي اللّهُ وَسَلَّمَ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعلَمِيْنَ.
    இரட்சகனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடையகுடும்பத்தாரின் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக!

ஏக இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு அருள்வளமிக்க காலைநேரமாகஆக்கிஅருள்வாயாக!

 நன்மையின் பால் நெருக்கமானதாகவும்,  தீங்குகளை விட்டு தூரமானதாகவும்,  நஷ்டமற்ற,,கைசேதப்படாத,நலன்கள் தடுக்கப்படாத காலை நேரமாக எங்களுக்கு ஆக்குவாயாக! 

இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை லாபகரமானதாகவும்,வெற்றிகரமானதாகவும் ஆக்குவாயாக!

 இறைவனே எங்களுடைய காலை நேரத்தை உன்னிடமிருந்து திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக!

 விதிகளின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! 

குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! 

 சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இரட்சகனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை நல்லடியார்களின் காலை நேரமாக்கியருள்வாயாக!

 மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக!

  எங்கள் உள்ளங்களை அச்சமுள்ள உள்ளங்களாக ஆக்குவாயாக!

 எங்கள் உடல்களை  வழிப்படுபவர்களின் உடல்களாக ஆக்குவாயாக!

 எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்குவாயாக!

 எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்குவாயாக!

கவனமின்றி இருப்போரின்  தூக்கத்திலிருந்து எங்களை எழுப்புவாயாக!

 நல்லடியார்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!

   சர்வலோகங்களின் இரட்சகனே!
 சுவர்க்கத்தை எங்களுக்கு அருள்வாயாக!

அல்லாஹ்வின் சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! 

சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.
 (ஆமீன்)

துஆ

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ ، لَا إِلَهَ إِلَّا أنْتَ  

   யா அல்லாஹ் நான் உனது கருணையை எதிர்பார்க்கிறேன் கண் இமைக்கும் நேரத்திற்கு கூட நீ என்னை (உன் பொறுப்பிலிருந்து என் பொறுப்பில் விட்டு விடாதே! என் விவகாரங்கள் அனைத்தையும் எனக்காக நீ சீர்படுத்துவாயாக! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர யாருமில்லை.  

(அபூதாவூத்,அஹ்மத்)

اللهم اجعلني ممن نظرت اليه فرحمته , وسمعت دعائه فأجبتــه

யா அல்லாஹ்! யாரின்பக்கம் உன் பார்வையை செலுத்தி கருணை காட்டி,அவர்களின் துஆவை கேட்டு அதற்கு பதில் சொன்னாயோ அவர்களில் ஒருவனாக என்னையையும் ஆக்குவாயாக!
اللهم اني اسالك من فجاءة الخير و اعوذ بك من فجاءة الشر
யா அல்லாஹ்!உன்னிடத்தில் எதிர்பாரவிதத்தில் வரும் நன்மையை  கேட்கிறேன்.எதிர்பாராவிதமாக வரும் தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்
ஆமீன்

துஆ

யா அல்லாஹ்! 
உன்னுடைய சிறப்புகள்
 உன்னுடைய கண்ணியம்,
உன்னுடைய மேன்மை,
உன்னுடைய வல்லமை,
உன்னுடைய ஆற்றல்,
உன்னுடைய அழகிய பெயர்கள்,
உன்னுடைய சிபத்துகள் 
ஆகியவைகள முன்னிறுத்தி
உன்னிடம் கேட்கிறேன்...

இப்பொழுது நாங்கள் இருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து 
 எங்களை விடுவிப்பாயாக!

رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ 
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்,

 அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும்

 எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

 எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!

 எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! 

எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!

 எங்களை மன்னித்தருள் செய்வாயாக!

 எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; ஏக இறைவனை நிராகரிக்கும்  கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286

اَللّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
அல்லாஹும்ம ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாபன்னார்.

இறைவா! எங்கள் அதிபதியே!

 இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! 
மறுமையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக. 

நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!

Saturday, 5 December 2020

காலை துஆ

என் ரப்பே! இந்த பஜ்ருடைய நேரத்தில் 
எங்கள் நெஞ்சங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவாயாக!

எங்கள் உள்ளங்களை நல்லவற்றை விரும்பும் உள்ளமாக ஆக்குவாயாக!

எங்களுக்கு உதவிசெய்பவனாக நீ
ஆகுவாயாக!

நல்வாய்ப்பை, குதுகாலத்தை,மன்னிப்பை
எங்களின் மீது விதிப்பாயாக!

எங்களின் துக்கங்களை போக்குவாயாக!

உன்னை அஞ்சிவாழ்பவர்களாக எங்களை ஆக்குவாயாக!

யா அல்லாஹ்! உன்னுடைய அருட்கொடையைப் பெற்ற ஆனந்தத்தில் அழுத வண்ணம்  நன்றி பெருக்கால் சஜ்தாவில் விழவைக்கும் மகிழ்ச்சியை ரிஜ்காக எனக்கு அருள்வாயாக!

அத்தகைய மகிழ்ச்சியின் பால் நான் மிகவும் தேவையுடையவனாக இருக்கிறேன்
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏ 
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இந்த துவை) ஏற்றுக் கொள்வாயாக;

 நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”.

 எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக;

 நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128

ஆமீன்