Monday, 11 September 2017

அரபா துஆ

அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அஹயானா வ இலைஹின் னுஷூர்.

தனது வற்றாக் கருணையினால் எங்களுக்கு உயிர் கொடுத்து உணவும் கொடுத்து அரபா நோன்பு நோற்க வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்

என் ரப்பே! நான் பலகீனமாக இருக்கிறேன். என்னை பலப்படுத்த உன்னையன்றி யாருமில்லை.

நான் நிராசையுடன் இருந்தாலும் உன் மீதுள்ள என் நம்பிக்கையை நான் இழக்கவில்லை.

நான் பல்வேறு துன்பங்களில் மூழ்கி கிடக்கிறேன். நீ மட்டுமே என்னை காப்பாற்ற முடியும்.

என் ரட்சகனே! பலகீனமான இந்நேரத்தில் என் மீது கருணை கொள்வாயாக.
என்னுடைய ஷைத்தானையும், என்னுடைய நஃப்சையும் என்னை விட்டு தூரமாக்குவாயாக.

என் உள்ளத்திற்கும் என் அறிவிற்கும் நேர்வழி காட்டுவாயாக.

என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக.

யா அல்லாஹ்! நீ இருக்கும் போது நான் யாரிடம் சென்று முறையிடுவேன்.

உன்னுடைய வாசல்கள் மூடப் படாமல் இருக்கும் போது நான் யாருடைய வாசலில் நின்று கண்ணீர் விட்டு அழுவேன்.

வணக்கத்திற்குரியவன் நீ மட்டுமே இருக்கும் போது யாரை நான் அழைப்பேன்.

உன்  மீது நான் வைத்திருக்கின்ற ஆதரவு எல்லையற்று இருக்கும் போது நான் யார் மீது ஆதரவு வைப்பேன்.

ரப்பே! உன்னுடைய மன்னிப்பை எனக்கு நிரந்தரமாக்கு.
உன்னுடைய திருப்தியை எனக்கு நிலை நாட்டு.

பாவங்களை எண்ணி கைசேதப்படுபவனாக என்னை ஆக்கு.

யா அல்லாஹ்! என்னுடைய தேவைகளை சிரமமானதாக ஆக்கி விடாதே.

என்னுடைய காரியங்களை பாரமானதாக ஆக்கி விடாதே.

யா அல்லாஹ்! என் ரகசியத்தை வெளிப்படுத்தி விடாதே.
என்னை கேவலப்படுத்தி விடாதே.

யா அல்லாஹ்! நான் பகிரங்கமாக மாறு செய்தால் என்னை மன்னிப்பாயாக.
நான் ரகசியமாக பாவம் செய்தால் அதை மறைத்து விடுவாயாக.

யா அல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தில் முஸிபத்தை ஏற்படுத்தி விடாதே.

இந்த உலக வாழ்க்கையை பெரும் கவலையாக ஆக்கி விடாதே.

யா அல்லாஹ்! என் உடலை சோதனைக்களமாக ஆக்கி விடாதே.
என்னுடைய செல்வத்திலும் என்னுடைய குடும்பத்திலும் சிரமத்தை ஏற்படுத்தி விடாதே.

யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக் கொண்டு ஹராமை விட்டும் தேவையற்றவனாக ஆக்குவாயாக.

உன் மேல் உள்ள அச்சத்தைக் கொண்டு உனக்கு மாறு செய்வதை விட்டும் பாதுகாப்பாயாக.

எனக்கு யாராவது தீங்கு இழைக்க நாடினால்,
அவர்கள் புறப்பட்ட இடத்திலேயே தடுத்துவிடுவாயாக!

யா அல்லாஹ்
எங்கள் நோய்களை குணப்படுத்துவாயாக!
எங்களில் மறைந்தவர்களில் பாவங்களை மன்னிப்பாயாக!
யா அல்லாஹ்!
இன்றைய நாளை சிறப்பான நாளாக ஆக்கி அருள்புரிவாயாக!
ஆமீன்.

No comments:

Post a Comment