Saturday, 21 November 2020

ஏக இறைவா

எங்களை படைத்த ஏக இறைவா! 
இந்த அதிகாலை நேரத்தில் நபி யாக்கூப் (அலை) அவர்கள் சொன்னது போல என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் உன்னிடத்தில் முறையிடுகிறேன்
.நீ தான் எங்களை படைத்தவன் என்பதிலும் நீ மட்டும் தான் எங்களைக் காப்பவன் என்பதிலும் எங்களுக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை.
அதே போன்று அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி தூதர் என்பதிலும் அவர்கள் காட்டிய வழி நடந்தால் தான் எங்கள் மறுமை வாழ்வு சிறக்கும் என்பதிலும் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
உன் மீதும் உந்தன் நபி மீதும் எங்களுக்கு அளவுகடந்த முஹப்பத் இருக்கிறது.தேவைப்படுமாயின் இஸ்லாத்திற்காக ஷஹிதாக வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது.
     ஆனால் எங்கள் ரப்பே நாங்கள் வாழுகின்ற இடம் குஃப்ரியத்தாலும் ஜாஹிலியத்தாலும் வழிகேட்டாலும் சூழ்ந்திருக்கிறது.அவைகள் எங்கள் ஈமானைப் பதம் பார்க்கின்றன.எங்கள் உள்ளம் மக்களிடம் கண்ணியத்தையும் மரியாதையையும் எதிர் பார்க்கிறது.
பெருஞ்செல்வம் இருந்தால் தான் கண்ணியம் என நினைத்து எங்களில் பலர் செல்வத்தை தேடி ஓடுகிறார்கள்.
அரசியல் அதிகாரம் இருந்தால் தான் நமக்கு மரியாதை என எண்ணி சிலர் அரசியல் நோக்கி ஓடுகிறார்கள்.

ஆபாசங்களும் அனாச்சாரங்களும் தலை விரித்து ஆடுகின்றன. அதில் எங்களின் இளைஞர்களும் இளைஞிகளும் சிக்கி சீர் அழிகின்றனர்.அதனை தடுக்க வழி இன்றி எங்களைப் போன்றோர் தடுமாறுகின்றனர்.
நாங்கள் எங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கின்றோமோ என்ற குற்ற உணர்ச்சி எங்களை வாட்டுகிறது.
      யா அல்லாஹ்!இந்த நேரத்தில் தாயிஃப் நகர மக்கள் நபி (ஸல்) அவர்களை துன்புறுத்திய பொழுது,நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆவை தான் உன்னிடத்தில் நான் கேட்கின்றேன்.
      “யா அல்லாஹ்!என் பலவீனத்தையும் மக்கள் என்னை லேசாக கருதுவதையும் உன்னிடம் முறையிடுகிறேன்! கிருபையாளர்களில் மிகப்பெரும் கிருபையாளனே!நீ கிருபையாளர்களில் மிகக் கிருபையனவனாக இருக்கிறாய்.நீ என்னை யாரிடத்தில் ஒப்படைக்கிறாய்? என்னிடம் கடுகடுக்கும் எதிரியிடமா? அல்லது என் மீது நீ ஆதிக்கத்தை வழங்கிய உறவினரிடமா?
   யா அல்லாஹ்!நீ என் மீது கோபப்படவில்லையானால் அதுவே போதும்.நான் எதையும் பொருட்படுத்தவில்லை.உன் பாதுகாப்பே எனக்கு போதுமானது.”
  யா ரஹ்மானே! நபி கேட்ட துஆவுடன் நானும் என் கோரிக்கையை முன் வைக்கிறேன்.எங்களுக்கு ஹஜ்ரத் அபூ பக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களைப் போல் உண்மை பேசும் நாவைக் கொடு. ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களைப் போல் தவறுகளைத் தட்டி கேட்கும் தைரியத்தைக் கொடு. ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களைப் போல் பாவம் செய்யாமல் இருக்கும் வெட்கத்தைக் கொடு.ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களைப் போல் அறிவு ஞானத்தைக் கொடு.ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு வழங்கியதைப் போன்று மார்க்கத்திற்கு செலவு செய்யும் பொருளாதாரத்தைக் கொடு.யாரிடமும் கை ஏந்தாமல் மார்க்கத்தை சொல்லும் நாவைக் கொடு.எங்களுடைய செயல்களில் இஹ்லாஸ் எண்ணும் தூய எண்ணத்தைக் கொடு.வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உனது ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து, மரணிக்கின்ற பொழுதும் உனக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே மரணிக்கும் பாக்கியத்தை தருவாயாக.ஆமீன்.

No comments:

Post a Comment